தனுஷ்கோடியில் இருந்து
வேகமெடுத்து உத்திரகோசமங்கை
நோக்கி பறந்து கார்.
உத்திரகோசமங்கை!
புராணமும் புராதனமும் பின்னிப் பிணைந்த உலகின் முதல் சிவ ஆலயம், இங்குள்ள மூலவர் சுயம்பு லிங்கம், மூவாயிரம் வருடங்களுக்கும் முந்தையது, உலகிலேயே பெரிய மரகத நடராஜர் சிலை என்பது போன்ற தகவல்கள் நமக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன.
ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, ரைட் எடுத்து தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் வேகமெடுத்து அகைன் ரைட்எடுத்தா உத்தரகோசமங்கை பெயர்ப் பலகை நம்மை வரவேற்கிறது.
உத்திரகோசமங்கை என்பதற்கு பார்வதிக்கு உபதேசம் தந்த இடமென்று பொருளாம். அதற்கு முன்பு இதன் பெயர் இலவந்திகை என்கிறது இலக்கியங்கள்.
மாணிக்கவாசகர் வந்தமர்ந்த இலந்தை மரம் இன்றும் தல விருட்சமாக திகழ்கிறது. இந்த மரத்தடியில் தான் மங்களநாதர் எழுந்தருளிய இருக்கின்றார்
ஐயா, என் பேரு மாணிக்கம். எனக்கு இன்னொரு பேர் இருக்கு. அது... என்று சூப்பர் ஸ்டார் டயலாக் மாதிரி
மங்களநாதருக்கும் இன்னொரு பேர் இருக்கு. அது...
கார் குலுங்கி நின்றது.
அதற்குள் கோயிலுக்கு வந்து சேர்ந்து விட்டோம். பார்க்கிங் கிடைக்காமல் பக்கத்து தெருவில் காரை சொருகி விட்டு எல்லோரும் இறங்க, நான் சட்டென்று நான் காரை விட்டு இறங்கி ராஜகோபுரம் நோக்கி நடந்தேன். கும்பாபிஷேகம் முடிந்து, புது மாப்பிள்ளை போல ஜம்மென்று இருந்தது ராஜகோபுரம்.
ஓம் நமச்சிவாய..
ஓம் நமச்சிவாய..
கோபுர வாசலின் இருபுறமும் அமர்ந்திருந்த யாசகர்கள் உச்சரிக்க உச்சரிக்க, என் நினைவு சட்டென்று பூர்வீக காலத்திற்கு புறப்பட்டு போனது.
இதோ நான் நிற்கின்ற இந்த இடத்தில் தான் என் காலடியில் ஒரு காலத்தில் கடல் இருந்தது. அதுவும் ஒரு கொடுங்கடல் என்று சொன்னால் யாராவது நம்புவீர்களா?
லேசாக புன்னகைத்துக் கொண்டேன்.
நான் கோபுர வாசலிலேயே தேங்கி நிற்பது கண்டு கோயிலுக்கு சென்று கொண்டிருந்த விமல் அண்ணனும் சம்பந்தம் அண்ணனும் அப்படியே நின்று விட்டார்கள்.
அவர்களை நோக்கி நடந்தேன். என் சிந்தனை பஃறுளி ஆற்றோடும், பன்மலை அடுக்கத்தோடும் பேசிக் கொண்டே வந்தன.
எல்லோரோடும் கோவிலுக்குள் நுழைந்தேன். ஏதோ விசேஷம் போல, ஏகப்பட்ட கூட்டம். நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய உயரமான பிரகாரங்கள் கோயிலின் பிரமிக்க வைக்கும் தோற்றத்திற்கு பங்களிப்புச் செய்கின்றன.
திருவிளையாடல் படத்தில் சிவாஜி சிவனாக வந்து, சுறாவினைக் கொன்று சாவித்திரியை மணக்கும் காட்சி வருமே, அதுவெறும் கற்பனை காட்சி என்று தானே நினைத்தீர்கள். காட்சி அல்ல. சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கும் காலத்தின் சாட்சி.
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.
என்று மாணிக்கவாசகரும் அதனை உறுதி செய்கின்றார்.
அண்ணாமலையில் இருந்து கொண்டு இலவந்திகை பற்றி பாடுகின்றாரே அந்த படலம் நடந்த இடம் வேறெங்கும் இல்லை. இதோ இந்த வாசலில் தான்.
முன்பொரு காலத்தில் உத்திரகோசமங்கையின் இந்த கோயில் வாசலில் தான் கடல் இருந்தது என்பதை கோவிலின் வெளிப்பிரகாரத்துத் தூண்கள், நந்தி சிலைகள், கடல்வாழ் பாறைகளை நினைவுபடுத்துகின்றன; கடற்காற்று அரித்த எச்சங்களைப் பறைசாற்றுகின்றன.
உத்திரகோசமங்கை கோவிற் குளத்து மீன்கள் கூட கடல் நீரில் வாழும் ரக மீன்கள் தான்.
அம்மன் சன்னதிக்குச் சென்றோம். அவ்வளவாக கூட்டமில்லை. வெளிப்பிரகாரம் சுற்றிக்கொண்டு மரகத நடராசர் சன்னதிக்கு போனோம்.
மரகத சிலை முழுக்க சந்தனத்தால் பூசி, சந்தன காப்பிட்டு இருந்தனர். அங்கிருந்து வெளியில் வந்தால் எதிரே இருக்கிறது தல விருட்சமாக விரிந்து இருக்கிறது இலந்தை மரம்.
அழகமர் வண்டோதரிக்குப் பேர்அருள் அளித்த பிரான் என்று இராவணன் மனைவி மண்டோதரி கூட இங்கே வந்து வழிபட்டுச் சென்றதாக மாணிக்கவாசகர் பாடுகிறார்.
மண் முந்தியோ மங்கை முந்தியோ! என்பது வெறும் வார்த்தை இல்லை. பெரும் நிஜம். கோயிலின் தொன்மை பேசும் சொல்லாடல். ராமேஸ்வரம் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.
ராமேஸ்வரம் என்னங்க.. ராமேஸ்வரம்.. சொல்லப்போனால் அப்போது இலங்கை என்றொரு தீவே இல்லை. ஆதி காலத்தில் இந்துமாக் கடல் தெற்கே இல்லை. எல்லாம் ஒரே நிலப் பரப்பாக இருந்தது. அப்போதே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.
நிலமெல்லாம் ஒரே கண்டமாக இருந்தது, அது ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்தது. அதை தான் லெமூரியாக் கண்டம் என்கின்றோம்.
லெமூரியா கண்டம் பற்றி; குமரிக்கண்டம் பற்றி, அதன் பெயர் காரணம் பற்றி ஆகச்சிறந்த ஆய்வாளர்கள் எல்லாம் ஏதேதோ டெப்னிசியன்ஸ் சொல்லி இருக்கிறார்கள்.
சரி உங்க கிட்ட ஒரு கேள்வி. லெமூரியானா என்ன அர்த்தம்..?
கொஞ்சம் கூகுள்ல சர்ச் பண்ணிட்டு வாங்களேன். அதற்குள் கோயிலை இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வந்து விடுகிறேன். இன்னும் இன்ச் இன்சாக சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான் காலம் இடம் தரவில்லை. அரை மனதாக, ஒருவழியா வெளியில் வந்தேன்.
எனக்கு முன்னே தம்பிகள் கோயிலை வெளிய வந்துவிட்டு இருந்தார்கள்
என்னடா கோயில் குளம்னு சுத்திக்கிட்டு, ஒரே போரா இருக்கே, என்று தம்பிகளுக்கு கொஞ்சம் சலிப்பு இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
புராண உருவாக்கங்களை, அவற்றுள் உள்ளுற உவமையாக இருக்கின்ற அதிமானுட நிகழ்வுகளை இப்படியான பயணங்கள் மூலமாக தான் நான் புரிந்துகொள்ள முயல்கிறேன் என்று.
அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
என்ன கூகுள்ல சர்ச் பண்ணிங்களா..? ஆளு ஆளுக்கு ஏதேதோ சொல்லி வச்சிருக்காங்களா.. 😊
லெமூரியா..!
அதாவது இளமுறியா என்பது கூட நம்மூர் பெயர் தான். நம்பவில்லை தானே..?
இலை மூரி என்றால் சோற்றுக்கற்றாழை. பறந்து விரிந்த நிலம் முழுக்க சோற்றுக்கற்றாழை விளைந்திருந்ததால் இது இளமுறியா கண்டம் என்றானது.
அவ்வளவு தாங்க மேட்டர்.
என்ன..
உங்கள் வீட்டு வாசப்படிக்கட்டுகளில் சோற்றுக்கற்றாழை தொங்கிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறதா? அப்போ நீங்களும் நானும் நாவலந்தேயவர் தான்.
அப்போ குமரி..?
சோற்றுக்கற்றாழையின் இன்னொரு பேர் குமரி. So.. குமரிக்கண்டம் என்றும் பெயரானது.
சங்கம் கடந்து, கால வெள்ளம் கடந்து, யுகம் கடந்து நிற்கும் இந்த மண்ணில் நானும் காலாற நடக்கிறேன் என்பதே ஒரு வைப் தானே.
சரி இங்கிருந்த எங்கே கடல் போயிற்று..?
கால நிலைகள் தந்த பூமிப் பரப்பின் மாற்றத்தால் அப்படியே பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்க்கம் போய்விட்டது.
ஐயா, என் பேரு மாணிக்கம். எனக்கு இன்னொரு பேர் இருக்கு. அது... என்று சூப்பர் ஸ்டார் டயலாக் மாதிரி, மங்களநாதருக்கும் ஏதோ இன்னொரு பேர் இருக்கு அப்படின்னு சொன்னீங்களே.. அது என்ன தலைவா என்று தானே கேட்க வருகிறீர்கள்..?
அது
பிரளய நாதர்!
ஆழிப் பெருவெள்ள தலைவன்.
#உத்திரகோசமங்கை #பிரளயநாதர் #மாணிக்கவாசகர் #தமிழ்மண் #குமரிக்கண்டம் #லெமூரியாகண்டம் #SpiritualJourney #TempleTrails
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக