வியாழன், ஜூன் 20, 2024

திராவிடம்

சமஸ்கிருதத்தில் (द्रव).த்ரவ என்கின்ற சொல்லுக்கு நீர் என்று பொருள். த்ராவகம் என்றால் செய்நீர். த்ராதி,  த்ராதும், த்ராவயதி, போன்ற சொற்களுக்கு ஓடுகின்ற, ஓடுவதற்கு வசதியான, என்றெல்லாம் பொருள். 

சமஸ்கிருதத்தில் इड/ इडा அதாவது இட என்றால் நிலம் அல்லது பூமி, ஆக द्राव +इड=> द्राविड. அதாவது த்ராவிட என்றால் நீர் ஓடுகின்ற, ஓடுவதற்கு வசதியான நிலம் அல்லது பூமி. 

அருவிகள் கொட்டுகின்ற, ஆறு பாய்கின்ற பகுதிகள் த்ராவிடம் என்றும் அங்கு குடில் அமைத்து வசித்து தமிழ் செய்த, மொழி இலக்கணம் செய்த ஞானிகள், முனிவர்கள், சாதுகள், அறிஞர் பெருமக்கள் த்ராவிடர் என்று அழைக்கப்பட்டனர். 

இப்படி நீரைக் குறிக்கின்ற சொல் நிலத்தைக் குறிக்கின்ற சொல்லாக மாறி பின்பு அது அறிவர்களை குறிக்கின்ற சொல்லாக மாறிப்போனது. அதன் பின் அது பார்ப்பனர்களை குறிக்கும் சொல்லாகவும் வளர்ந்து எழுந்தது. 

பிற்காலத்தில், தெற்கு குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, தெலங்கானா, சீமா ஆந்திரா, ஒரிஸ்ஸா, கர்நாடகா, தமிழ் நாடு, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய நிலப்பரப்புகளை  த்ராவிட என்று குறிக்கப் பெற்று, த்ராவிட எனும் சமஸ்கிருத சொல்லுக்கு தென்புலம் என்று பொருள் அகராதி கொடுக்கப்பட்டது. 

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழர்களில் கற்று அறிந்த சான்றோர்க்கு திராவிடர் என்று பெயர் கொடுக்கலாம்..

வரலாற்றுச் செறிவுகளும் தொன்ம பின்புலமும் நிறைந்த திராவிட எனும் சொல்லுக்கு, வேஷ பாப்பனர்களும், போலி தமிழ்தேசியர்களும் ஏன் எதிராக இருக்கிறார்கள் என்று மூலம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 

ஆக, இத்தகைய வரலாற்றுத் தரவுகளை அறிந்து தான் அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்கள் பறையர்களை சாதி பேதமற்ற திராவிடர்களாக அறிவிக்க கோரிக்கை வைத்தனர். 

ஆதி பார்ப்பனர்கள் யார் என்ற வரலாற்று உண்மைகள் மக்கள் மத்தியில் கவனம் பெறுகின்ற போது ஆதி திராவிடர் என்கின்ற பெயரில் இருக்கின்ற அறிவு மரபின் வரலாற்றுச் செறிவை யாவரும் அறியக்கூடும். 



சமரன்
19:06:2024

செவ்வாய், ஜூன் 18, 2024

அடித்து நொறுக்கப்பட்ட அறிவாளிகள்"


ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக நம் நாட்டில் மாமன்னர்களும், செல்வந்தர்களும் மேல் சாதிகாரர்களும் அவர்களோடு தொடர்புடைய அறிஞர்களும் மட்டுமே கல்வி கற்று வந்தனர், கல்வியறிவு என்பது அவர்களுக்கு மட்டும் உரித்தான சிறப்பு உரிமையாக இருந்தது.


ஏழை மக்கள் கல்வி பெற்றால் தமது உரிமைகளை பற்றி அறிந்து கொள்வதன் மூலம், அரசுகெதிராக தமது அதிருப்தியை,எதிர்ப்புணர்வை காட்டு வதற்கு வழி வகைகளை அறிந்து கொள்வர் என்கிற காரணத்தால் ஆட்சியாளர்கள் யாரும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி புகட்டுவதை ஒரு முன்னுரிமை பணியாக கருதியதில்லை.


இதனை அனைத்து ஆட்சியாளர்களுமே மிக கவனமாக தவிர்த்து வந்தனர். அடிமை வர்க்கம் காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக வழங்கப்பட்டு வந்தவைகளையே தமது அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக்கினர். இந்நிலையில் தான்.


அறிவில் செழித்த அவ்வை ஒரு ஆட்டிடை சிறுவனிடம் தோற்று போனாள், ஏகலைவன் என்றொரு எளிய மனிதன் வில்லுக்கே விஜயனை வீழ்த்தி காட்டினான், சூத்திரம் கற்ற கொன்பன் என்ற அந்த கம்பன் செல்ல காசாகி போனான் ஒரு ஏற்றகாரனிடம்.


எல்லாம் தெரிந்தவர்கள் இறுமாப்பும், எம்மை விட இங்கே யார் ? என்கிற தலைகணமும் அடித்து நொறுக்கப்பட்டு தவிடு பொடியான தருணங்கள் அவை. 


மகுடம் தரித்த குடி மருண்டு போனது; அலறி துடித்தது அவர் தம் அடி வருடி கும்பல். இதை வளர விடுவது வர்க்க பேராபத்து என உணர்ந்து காணிக்கை எனும் பெயரில் கட்டை விரல் பறிக்க பட்டது. ஆட்டிடை சிறுவன் ஆறுமுகத்தான் என திரிக்கப்பட்டது.


அடிமை வர்க்கத்தில் இருந்து அறிவாளிகளும் திறமைசாலிகளும் வரவே முடியாது, அப்படி ஒருவன் தோன்றினால் அவன் உயர் குடி விந்தில் உற்பத்தியானவன் என்கிற நச்சு கருத்து நயமாய் சொல்லப்பட்டது. இதன் தொடர் நிகழ்வுதான் தேரோட்டியின் மகன் கர்ணன் சூரியனுக்கு பிறந்ததாக சொல்லப்பட்டதும்,அவ்வை கிழவி தோற்றுப்போனது கடவுளிடம் .இடை சாதி சிறுவனிடம் அல்ல என்று மறுக்கப்பட்டதும்,

இன்னும் பிறவும்...


சதி ஆலோசனைகள் சட்டங்கள் ஆக்கப்பட்டன. படிப்பது தடை செய்ய பட்டது. உழைப்பவன் கற்பது பாவம் என உருவாகப்படுத்த பட்டது. மீறினால் தலையை வெட்டு ! காதில் ஈயம் காச்சி ஊற்று! நாக்கை அறு! என அடாவடிதனங்கள் அரங்கேறின. சாதிய படிநிலை சாமர்த்தியமாக கட்டமைக்க பட்டன. அனல் வாதம், புனல் வாதம் மூலம் கொஞ்சம் நஞ்சமிருந்த மக்கள் அறிவு களஞ்சியங்கள் அழித்தொழிக்கப்பட்டன.



பின் வந்த வெள்ளை அரசும், அதற்க்குபிறகான ஓட்டுபொறுக்கி அரசுகளும் தமது கட்டளைகளை புரிந்துனரவும், கணக்கு வழக்குகளை பார்க்க்கவுமான மிக மிக எச்சரிக்கையான கல்வியையே மக்களுக்கு கொடுத்து வருகிறது.

அதும் ராஜபாட்டைகளிலும், மாட வீதிகளிலும், கொலு வைத்த கல்வி. ஒரு விவசாய கூலிகாரன் விரும்பினாலும் தன் சந்ததிக்கு கிடைக்காத சமச்சீர் கல்வி.


மறுக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, இதோ.. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சிதைத்து சிதைத்து மழுங்கடிக்கப்பட்ட அந்த அறிவாயுதம் எங்கள் கைகளுக்கு வந்து தவறி விழுகிறது. 

உயர உயர பறந்தாலும் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்கிற மேற்கோள்களுக்கு பின்னிருக்கும் மோசடி தனங்களை நாங்களறிவோம். தேடி எடுத்து இறுகுப்பற்றி தூக்கி பிடிப்போம் எங்களுக்கான அந்த அறிவாயுதத்தை!


தலையை வெட்டிய கும்பலே, நாக்கறுத்த கூட்டமே, கட்டை விரலை காவு வாங்கிய வர்க்கமே நந்தனை கொன்ற நெருப்பின் மிச்சமும், நக்கீரனை எரித்த சூட்டின் வெப்பமும் அதை கொஞ்சம் கொஞ்சமாய் கூர் படுத்தும்.

*சமரன்*
18:06:2011