வியாழன், ஜனவரி 23, 2025
ஆரியர்கள், திராவிடர்கள், தமிழர்கள் பூர்வீகம் என்ன?
ஆரியர்களும் திராவிடர்களும் இனக் குழுக்கள் அல்ல ; பயண குழுக்கள். ஒரே நிலத்திலிருந்து கிளம்பிச் சென்ற இரு பெரும் பயண குழுக்கள்.
இந்த இரு குழுவினரையும் பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு, ஆழிப்பேரலை எதிர்கொண்டு பூர்வீக மண்ணிலேயே போராடி வாழ்ந்தவர்கள் நாகர்கள். நாகர்களின் தலைவனை பிரான் என்று அழைப்பது மரபு.
அதைப் போன்றே
சமஸ்கிருதத்தை அதன் அறிவு சார் பெருமக்களை காத்து நிலம் வழியே பயணப் பட்டவர்கள் தங்களது மூப்பர்களை ஆர்ய என்று அழைத்துக் கொண்டனர்.
தமிழை அதன் அறிவு சார் பெருமக்களை காத்து நீர் வழியே பயணப்பட்டவர்கள் தங்களது வழிகாட்டிகளை திராவிட என்று அழைத்துக் கொண்டனர்.
பிரான் என்பதும் ஆரிய என்பதும் திராவிட என்பதும் மரியாதைக்குரிய டைட்டில்கள். இவை அனைத்தும் நாகர்களின் தலைவர்களை, மூப்பர்களை, வழிகாட்டிகளை அடையாளப் படுத்துகின்ற Noble titles.
பின்னாளில்..
சமஸ்கிருதத்தை ஆரியம் என்றும் தமிழை திராவிடம் என்றும் பைந்தமிழர் எழுதியும் பேசியும் வந்தனர்.
சான்றாக..
வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் #த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்கிறார் தாயுமானவன்.
பாடலின் பொருள் :
வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன்.
அதாவது தமிழ் என்ற வார்த்தைக்கு நிகராக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் தாயுமானவர்.
பக்தாம்ருதம் விஸ்வஜநானுமோதனம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்
ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் #த்ராவிட வேத ஸாகரம்.
பாடலின் பொருள் :
ஸ்ரீமன் நாரணனின் பக்தர்களுக்கு பருகதற்கினிய அமுதம் போன்றதும் பக்தர்களை இறைவனுக்கு அமுதமாக்குவதும், பயிலும் எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைத் தருவதும், வேண்டியவற்றை எல்லாம் தருவதும், மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியாக இருப்பதும், ஆயிரக்கணக்கான பகுதிகள் கொண்ட வேத உபநிடதங்களுக்கு நேரான ஆகமமானதுமான தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்.
அதாவது தமிழ் என்ற வார்த்தைக்கு நிகராக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் நாதமுனி.
#ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே'
(தமிழ் தாய் வாழ்த்து)
பாடலின் பொருள் :
உலக வழக்கு அழிந்து ஒழிந்த சமஸ்கிருதம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே
அதாவது சமஸ்கிருதம் என்ற வார்த்தைக்கு நிகராக ஆரியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளை.
அன்னையும் (தமிழ்) பிதாவும் (சமஸ்கிருதம்) முன்னறி தெய்வம்.
தமிழ் எமது பேச்சு மொழி, சமஸ்கிருதம் எமது குறியீட்டு மொழி. தமிழ் என்பது மக்கள் மொழி. சமஸ்கிருதம் என்பது அறிவர் மொழி, இரண்டுமே தமிழர் மொழி ; அது எமது நாகர் மொழி!
உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகின்ற மெசபடோமியா நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், எகிப்திய நாகரிகம், சீன நாகரிகம் உள்ளிட்ட உலகின் தொன்மையான நாகரீகங்களை படைத்ததும் நாகர்களின் இரு பெரும் ஆர்ய, திராவிட பயண குழுக்களே. பின் இந்த இரு குழுக்களும் தாய்நிலம் தேடி நாவலன் தேயம் வந்தடைந்தனர்.
உலகம் முழுவதும் சிதறிய தமிழன் உருவாக்கிய நகரங்கள் யாவும் எமது ஊரே! அங்கு வாழ்கின்ற யாவரும் எமது உறவே! என்பதை உணர்த்திட தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் எம் முப்பாட்டன்.
ஆனால்..
சுய சிந்தனையற்ற காப்பி பேஸ்ட் கும்பல்கள் திராவிட போலிகளின் மூலம், தமிழ் தேசிய போலிகளின் மூலம் பொய்யான பரப்புரைகளால்,
சமஸ்கிருதத்தை தமிழர்களின் எதிர்நிலைக்கு நகர்த்தியத்தைப் போன்றே திராவிடத்தையும் தமிழர்களின் எதிர்நிலைக்கு நகர்த்துகின்ற போக்கு இங்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
களவாடப்படும் எமது அறிவுசார் சொத்துகள் | தாரை வார்க்கப்படும் எமது அறிவுசார் சொத்துக்கள் நிச்சயம் ஒருநாள் மீட்கப்படும்.
சமரன்
#பிரான் | #ஆரியர் | #திராவிடர் | #தமிழர் | #தமிழ் | #சமஸ்கிருதம் | #மொழி | #அறிவுசார்சொத்துக்கள்
வியாழன், ஜனவரி 09, 2025
என்ன செய்யப் போகிறீர்கள்..?
♦️தகடூர் படையெடுத்த எதிரிகளுடன் போர் செய்து களத்தில் வீழ்ந்த பறை கலியனாரின் வீரம் செறிந்த வரலாறு தகடூர் நடுகலாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. படை கட்டுவதில் பறையர்களுக்கு இருந்த திறனை, பற்றுறுதியை சோழர்கால கல்வெட்டுகளும் திருவிந்தலூர் செப்பேடுகளும் செப்புகின்றன.
♦️வலங்கை படையே நிரந்தர போர் படை யென்றும் அந்த வலங்கை மகா சேனைகளை வழி நடத்தியவர்களே பறையர்கள் தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். இடங்கை ஜாதிகளின் மீது அடக்குமுறைகளும் ஆதிக்கங்களும் செலுத்திய பறையர்களுக்கு வலங்கை மாற்றான், வலங்கை தலைவன் என்றும் பட்டங்கள் சூட்டப்பட்டதை 17ம் நூற்றாண்டு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
♦️மூவேந்தர்களின் முடியாட்சிக்கு பிறகும் கூட பறையர்கள் படை மறவர்களாக இருந்ததை, காவல் தொழில் புரிந்ததை, மக்களை காத்து நின்றதை மராட்டிய ஆவணங்கள், புதுக்கோட்டை, திருமயம் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.
♦️திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் காவற்பறையனுக்கு கோயிலே உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. அந்த கோயில் இருக்கும் தெருவிற்கு காப்பறையந்தெரு என்று பெயர். அந்த காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை சங்கரநயினார் கோயில் தல வரலாறு சொல்கிறது. (https://www.instagram.com/manikirivar_official/?hl=el)
♦️சங்கரநயினார் கோயிலில் இன்றைக்கும் காவல் பறையன் மனிக்கிரீவனுக்கு சிலை வைத்து வணங்கப்பட்டு வருகிறது. அக்கோயில் இன்றும் காவற்பறையன் அருமை பெருமைகளை பேசுகிறது. சித்திரைவிழா ஆரம்பமாகும் முன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழ்கிறது.
( https://sankarankovil.com/history.html)
♦️ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்று பட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை பொது மக்கள் அவருக்கு வழங்கியுள்ளனர். இக்காவல்பணியிலிருக்கும் அவருக்கு இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊர் மக்கள் முடிவுசெய்தனர் என்று பறையர் ஊரைப்பாதுகாக்கும் பணிபுரிந்ததை காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவில் கல்வெட்டு நமக்கு சொல்கிறது (IPS 843)
♦️பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் பணியாற்றியதை "அரையன் அணுக்க கூவன் பறையனேன்" என்ற கல்வெட்டு வரிகள் உணர்த்துகிறது. (தென் இந்திய கல்வெட்டு. 14; க.எ. 56) தனக்கு கீழ் இருந்த படை வீரர்களுக்கு கட்டளையிடும் உயர் பொறுப்பில் சாக்கைப் பறையனார் என்பவர் இருந்ததை செங்கம் நடுகல் நடுகலொன்று குறிப்பிடுகிறது.
♦️பறையர்கள் இயல்பிலேயே வீரமும் தொன்றுதொட்டு அறிவாற்றலையும் மிகுதியாக கொண்ட, மரபு வழி போர் முறைகளை கற்றறிந்தவர்கள், மரபு வழி போர் கருவிகளை பயன்படுத்துவதில் மிகவும் வல்லவர்கள் என்பது எந்தவொரு பாடப்புத்தகங்களிலும், எந்தவொரு ஆய்வுநூல்களிலும் எந்தவொரு மேடைப் பேச்சுகளிலும் எளிதில் கிட்டாத ஒரு சித்திரமாகும். ஆனால் அந்த சித்திரத்தை காலம் தமது வரலாற்று பக்கங்களில். தொடர்ச்சியாக பதிவுசெய்துக் கொண்டுதான் வருகிறது.
அப்படி ஒரு வீர வரலாறுதான் பறையர் ரெஜிமென்ட்
♦️பிரெஞ்சுக்காரர்களிடம் மெட்ராஸை இழந்து பிரிட்டிஷார் மிகவும் பரிதாபத்துடன் நின்றபோது, வெறும் இரண்டாயிரம் பேரைக் கொண்டு எட்டாயிரத்திற்கும் மேலான பிரஞ்சுப் படை வீரர்களை தெறிக்கவிட்டு பூர்வீக மண்ணான மதராஸ் மாகாணத்தை மீட்டெடுத்த 'பறையர் ரெஜிமென்ட் வரலாறு தனித்துவமானது.
♦️பறையர் படைப் பிரிவு மட்டும் இல்லாமல் போயிருந்தால், பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் மறைவதில்லை என்கின்ற கெத்தப்பான பேச்சு இருந்திருக்கவே இருந்திருக்காது. உலக வரைப்படமே மாறிப்போய் இருக்கும். உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததும் உலக வல்லாதிக்க சக்தி யார் என்பதை தீர்மானித்தும் இந்த பறையர் ரெஜிமென்ட் போர் தான் என்று வரலாற்று ஆய்வாளர் 'Frank McLynn' குறிப்பிடுகிறார்.
♦️வெற்றிகளுடன் ஜார்ஜ் கோட்டையை நோக்கி வந்த பிரெஞ்சுப் படைகள் பறையர் படையின் ஆக்ரோஷ தாக்குதலால் நிலைகுலைந்துப் போனது. ஏறக்குறைய 67 நாட்கள் தொடர்ந்த இந்த கடும் போரில் பிரஞ்சு படை முற்றிலும் வீழ்த்தப்பட்டது. கடந்த 16:02:1759 அன்று வெள்ளிக்கிழமை பறையர்கள் பிரெஞ்சுப் படையை முழு முற்றாக வென்றனர்.
♦️மதராஸ் மீட்பு போரில் மதராஸ் பூர்வக்குடி மக்களின் பங்கு சிறப்பு வாய்ந்தது. ஏன் என்றால் அவர்கள் சொந்த மண்ணை காக்க போரிட்டனர் என்று 'Elder Smith' எனும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
♦️தெற்காசியாவின் முக்கிய வணிக நகரமாகிய மதராஸில் நடந்த இந்த போரில் பறையர்களின் பங்கு அளப்பரியது. பறையர்களின் வீரம் தியாகம் மற்றும் கடமையுணர்வு மிக்க நடத்தைக்காக நிறுவனத்தின் இராணுவ அதிகாரிகள் அடிக்கடி அவர்களைப் பாராட்டியதாக மனாஸ் தத்தா தனது ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார்.
♦️இந்திய மண்ணில் பேரரசை கட்டியெழுப்ப உதவிய மக்களை மறந்துவிடுவது நியாயமில்லை" என்று ஆங்கிலேயர்களின் முகத்தில் அடித்தார் போல பேசி பறையர் ரெஜிமென்ட் வரலாற்றை வட்டமேசை மாநாட்டில் நினைவு கூறுகின்றார் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்.
♦️பூர்வீக மண்ணை போராடி வென்ற அந்த ரத்தம் சரித்திரத்தின், வீர வரலாற்றின், பறையர் ரெஜிமென்ட்டின், 266. ஆம் ஆண்டு வெற்றிவிழா வரும் பிப்ரவரி 16 ந்தேதி எதிர்வர உள்ளது. பீமா கோரேகான் போராட்டத்தை நினைவுக் கொள்கின்ற வரலாற்று ஆய்வாளர்களும் தமிழகத்து பறையர்களும் அதற்கும் அறுபது ஆண்டுகளுக்கு முன் நடைப்பெற்ற மெட்ராஸ் பறையர் போர் வரலாற்றை நினைவுகூராமலும் ஆவணப் படுத்தாமலும் கடந்து சென்றது ஏனென்று நாளை தலைமுறை கேள்வி எழுப்பும்.
என்ன செய்யப் போகிறீர்கள்..?
சமரன்
09:01:2025
#ParaiyarRegiment | #TheMadrasRegiment | #History
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)