வெள்ளி, ஏப்ரல் 26, 2024

சீக்ரெட் ஆஃப் வாட்டர்

சீக்ரெட் ஆஃப் வாட்டர்  
 ------------------------------

மதிய நேரம்  
டிராபிக் கொஞ்சம் குறைவாக தான் இருந்தது. திருப்போரூர் வந்துக்கொண்டிருந்தேன். ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு மூன்று டேங்கர் லாரிகள் எதிரே ஊர்ந்துகொண்டிருந்தன. சட்டென்று வீரக்குமார் அண்ணன் நினைவுக்கு வந்தார். ஒரு லோடு தண்ணீர் கேட்டு வெகு நாளாயிற்று இன்னும் தண்ணீர் வைத்தபாடில்லை. டேங்கர் லாரி தம்பிகளுக்கு கால் செய்து பேசிக்கொண்டே வந்தேன்.  
 
யென் அங்கேயே தண்ணீ வைக்கலாமே.. ? 
இங்கிருந்து போற தண்ணீ என்ன ஸ்பெஷலா.. 
 
இங்க TDS Level  நல்லா இருக்கு. Less than 300 TDS Level  excellent, இது நம்மூர்ல சாதாரணமாவே  கிடைக்குது. அதனால் தான்.   
 
சோறும், நீரும் விற்பனைக்கல்ல’ முதுமொழி பேசிய இந்த  மண்ணுலதான் தண்ணீர் விற்பனை கொடிக்கட்டி பறக்குது. என்னத்த சொல்ல.. என்று அங்கலாய்த்துகொண்டே கேட்டேன்.   
 
 
உலகிலேயே மிக விலை உயர்ந்த தண்ணீர் எது தெரியுமா?   
 
கோல்டன் - சி' எனும் தண்ணீர் தான்.  ஒரு அவுன்ஸ் நீரின் விலை, 5,000 ரூபாய். அமெரிக்காவின், சாண்டியாகோ மாநிலத்தில் உள்ள சுரங்க பகுதிகளிலிருந்து, அரிய மருத்துவ குணம் உடைய, படிக கல்லுடன் கிடைக்கும் நீரை சுத்திகரித்து விற்கின்றனர்.  
 
அப்பு, அம், அம்பணம், அம்பு, அமுதகம், அமுது, அயம், அரி, அலம், அலர், அளகம், அளறு.. இப்படின்னு தண்ணீருக்கு மட்டும்  நூற்றுக்கணக்கான பெயர்கள் இருக்கு.  தண்ணீரை அமிழ்தம் என்கிறார் வள்ளுவப் பாட்டன். அவரே நீரின்றி அமையாது உலகு என்று தண்ணீரின் பெருமையை போற்றுகின்றார்.  
தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகம், இன்றளவும் தாயையும் தாய் தெய்வ வழிப்பாட்டை முதன்மைப்படுத்துபவர்கள் தமிழர்கள். அப்படிபட்ட ஆனானப்பட்ட தமிழனே  ‘தாயை பழித்தாலும் தண்ணீரை  பழிக்காதே’ என்கிறான் என்றால் அந்த தண்ணீரின் மேன்மையை, அருமையை, பெருமைகளை எண்ணிப் பாருங்களேன்.  
 
தண்ணீரின் 97 சதவீதம் உப்பு நீராகக் கடலில் உள்ளது. 2 சதவீதம் பூமியெங்கும் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. மீதி1சதவீதம் தண்ணீரைத்தான் குடிநீராகவும் விவசாயத்துக்கும் மற்ற வேலைகளுக்கும் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.  
 
என்று சொல்லி நிறுத்தி காரை ஓரங்கட்டச்சொல்லி சைகை செய்தேன். ஒரு ஓரமாய் வண்டி நின்றது. குடிக்க ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிகொண்டு மீண்டும் கார் வேகமெடுத்தது.  
 
தண்ணீரை உட்காந்து தான் குடிக்க வேண்டும். அதுவும் உதடு நனைய குடிக்க வேண்டும். குடிநீரை நின்று குடித்தால் நோய். அமர்ந்து குடித்தால் மருந்து. தெரியுமா?  தண்ணீர் பருகும் போது தண்ணீர் செல்லும் இடமெல்லாம் பிராண சக்தி செல்கிறது. களைப்பாக இருந்தால் ஊசியோ மாத்திரை மருந்தோ எடுத்துக்கொள்வதில்லை, மாறாக உடனே குளித்து விடுகின்றோம். உலகின் அனைத்து மதங்களிலும் தண்ணீரின் பங்கு புனிதமானது.  
 
மணமகளை அலரிப்பூவும், நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய நான்கு பெண்கள் நீராட்டும் வழக்கத்தினை அகநானூறு குறிப்பிடுகிறது. பெண்ணின் பூப்பு நீராட்டு, மன்னர்களின் வெற்றி நீராட்டு, இறந்தார்க்கு ஊரறிய ‘நீர்மாலை’ எடுத்து வந்து நீராட்டுதல் என தமிழரின் ஒவ்வொரு பண்பாட்டு அசைவுகளிலும் நீர் நீக்கமற்று நிறைந்திருக்கிறது.  
 
சமணம் தமிழக மண்ணில் வீழ்ந்ததற்கு தண்ணீரும்  கூட ஒரு காரணம் தான். என்று நிறுத்திவிட்டு தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து ஒரு மடக்கு குடித்து முடித்தேன்.  
 
இன்னொரு மடக்கு குடிப்பதற்கு ஏதுவாக கார் வேகம் குறைந்து ஊர்ந்தது. முருகன் கோயிலை கடந்துக்கொண்டே சொன்னேன். கோயிலே புனிதமானது. அப்படிப்பட்ட கோயிலையே தண்ணீர் கொண்டு நீராட்டுகிறார்கள் என்றால் நீரின் பெருமையை என்னவென்று சொல்வது என்று தண்ணீருக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் கொடுத்தேன்.  
காரில் இருந்தவர்களால் தண்ணீரை விட்டு வெளியே வர விருப்பம் இல்லை. இன்னும் இன்னும் ஏதேனும் சொல்வானா என்று பேச் மூச் இன்றி கவனித்துக்கொண்டிருந்தை உணர முடிந்தது.  
தொடர்ந்தேன்.. 
பூமி 23 டிகிரி சாய்ந்து இருக்கிறது. இந்தக் கோணம் சிறிது மாறியிருந்தாலும் இந்த உலகில் நீர் பனிக்கட்டியாகவே இருந்திருக்கும். உயிர் உருவாகியிருக்காது என்கிறார்கள் விஞ்ஞானிகள். உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தண்ணீர் தான் காரணம். உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தண்ணீர் தான் காரணம். உலகம் உருவான போது எவ்வளவு நீர் இருந்ததோ அவ்வளவு நீர் தான் இன்றும் இருக்கிறது. பனிக்கட்டி, தண்ணீர், நீராவி என்று நீரை மாற்ற மட்டுமே முடியுமே தவிர உங்களால் ஒருபோதும் தண்ணீரை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. தண்ணீரை நிரந்தரமாக அசுத்தப்படுத்தகூட  முடியாது. என்ன செய்தாலும் அது தன்னை தானே சுத்தப் படுத்திக்கொள்ளும். இவ்வளவு பரந்த உலகில் நீர் தரையிலிருந்து 15 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேலே தண்ணீரால் உயரமுடியாது. கடலுக்கடியிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு கீழே நம்மாலும் செல்ல முடியாது. அழுத்தம் காரணமாக நொறுங்கி விடுவோம்.  
 
 
இன்னொன்று சொல்லட்டுமா? 
இந்த தண்ணீர் பூமி பந்தில் உருவாக வில்லை. வெளியில் இருந்து

வந்தது. பூமிக்கு தண்ணீர் சொந்தமே கிடையாது. இங்குள்ள நீரெல்லாம் Carbonaceous Chondrites எரிகற்களால் பூமிக்குக்குக் கொண்டுவரப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் தான் உண்மை என்கிறார்கள் கோளியல் விஞ்ஞானிகள்.  
 
கார்பனேசிய காண்டிரைட்டுகள் போன்ற விண்கல் பூமிக்கு நீரின் பெரும்பகுதியை வழங்கியிருக்கலாம், இது கடல் நீருடனான ஐசோடோபிக் ஒற்றுமைகளுக்கு சான்றாகிறது என்கிறார்கள் அவர்கள். 
 
நீர் நெருப்பில் பிறந்து காற்றில் உருகி நிலத்தில் சேர்கிறது. ஹைட்ரஜன் வெடிக்கக்கூடியது தீப்பற்றக்கூடியது, ஆக்ஸிஜன் எரிவதற்கு துனை செய்வது. இவை இரண்டும் சேர்கின்ற போது வெடித்து தீப்பிடித்து எரியதானே வேண்டும். ஆனால் அந்த தீயையே அணைக்கும் நீராக பிறக்கிறது. எது தன்னை ஆவியாக்குமோ அந்த நெருப்பில் இருந்து தான் நீர் பிறக்கிறது. 

நீர் ! அதுவொரு அறிவியல் பிரம்மாண்டம். 

நீரானது அதன் வெட்பநிலை கடத்தலே இத்தனை பெரிய உலகம் பிறக்க காரணம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? தண்ணீருக்கும் ஞாபக சக்தி என்பது இருக்கிறது. கையாள்பவருடைய எண்ணங்களை அது தனது நினைவில் வைத்துக் கொள்கிறது. நீங்கள் தண்ணீரை வாழ்த்தும் போதும், திட்டும் போதும் அதனுடைய அமைப்புகளில் மாற்றம் நிகழ்கிறது. நம்புங்கள் நாம் பேசுவதை தண்ணீர் கவனித்துக்கொண்டிருக்கிறது.  
நான் சொன்ன வாட்டர் சீக்ரெட் ஒரு குவளை தான். இன்னும் அது கடல் போல் பரந்து விரிந்து கிடக்கிறது.

என்று முடிக்கவும் கார் அலுவலகம் முன் வந்து நிற்கவும் சரியாக இருந்து.

ஞாயிறு, ஏப்ரல் 21, 2024

வாசுகி பாம்பு..?

வாசுகி பாம்பு..?

மானுட குலத்திற்கு அறிவு புகட்ட வந்த அறிவியலாளர்கள் நாகர்கள். இந்து புராணகதைகளில் அசுரர்களாக | ராட்சசர்களாக |  சித்தரிக்கப்படுவது இந்த நாகர்களை தான். யூத | கிருஸ்துவ | இஸ்லாமிய மதங்கள் சித்தரிக்கும் சாத்தானும் இந்த நாகர்கள் தான். 

தனது சுய லாபங்களுக்காக மனித குலத்தை அடிமைப் படுத்திய கடவுளர்களுக்கு எதிராக மக்கள் பக்கம் நின்ற போராடிய கலக்காரர்கள். மதங்களுக்கு வேதங்களுக்கும் எதிராக கலகம் செய்த புராட்சிக்காரர்கள்.

தன்னை அறிவதே இறைத்தன்மை என்னும் கோட்பாட்டு தலைவர்கள். 

வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலும் இந்திய நிலப் பரப்பு முழுவதும் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள். 

அஹிவ்ரித்ரா, அஸ்வசேனா, தக்ஷகா, கோனந்தா, லோஹாரா, வடக்கின் கர்கோடா; கிமு 642 இல் காசியின் பிரகமதுத்தா, மகதத்தின் சிசுநாகா (பண்டைய இந்தியாவில் புரட்சி மற்றும் எதிர் புரட்சி: டாக்டர். பி. ஆர். அம்பேத்கர்), வடகிழக்கு நாகாஸ்; மத்திய இந்தியாவில் பத்மாவதி (பார்ஷிவா), விதிசா, எரன், மதுரா, அஹிச்சத்திரம், கௌசாம்பி, மாளவா, சக்ரகோட், போகவதி என நீளும் நாக அரசர்கள்.  

சாதவாகனர்கள் (கி.மு. 235 - கி.பி. 225) சுட்டுக்கள், சாளுக்கியர், பல்லவர், கடம்ப, சிந்தகா, சேர, தென்னிந்திய சோழர் உள்ளிட்டோர் நாகர் கலப்பில் உருவான வம்சங்கள்.

 
சங்ககால தமிழர்களின் | நாகர்களின் பெயர்கள் பெரும்பாலும் சாத்தன் | சாத்தான் | சாத்தி |  பிடாரான் | பிடாரி கொன்றன் | கொற்றி என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீலகேசியில் பூதவாதியின் அதாவது உலகாயதம் பெயர்கூட பிசாசகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சீன மற்றும் ஜப்பானிய புராணங்களில் வரும் #டிராகன் என்பதே  நாகன் தான். #இன்கா என்பதும் நாகா தான்; #கானா என்பதும் நாகா தான். ஆதி சாத்தன் தான் ஆதிசேஷன் என்றானது. 

வாசுகி தட்சன் கார்கோடகன் என்பதெல்லாம் நாக பேரரசர்களே அன்றி பாம்புகள் அல்ல. 

தமிழர்களின் வரலாறு மட்டுமல்ல மனித குல வரலாறு என்பதே நாகர்களிடமிருந்து தான் துவங்குகிறது. உலகின் தொன்மையான இனக்குழுக்கள் யாவரும் கலப்பின நாகர்கள் தான்.
கலப்பில்லாத நாகர்கள் யார் தெரியுமா? பறையர்கள். 

அறிவியலாளர்களாக, அறிஞர் பெருமக்களாக, ஆட்சியாளர்களாக பூமிப்பந்தில் கோலோச்சி நின்ற நாகர்களை பாம்புகள் என்று  மொழிபெயர்ப்பு செய்வது அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை களை மூடி மறைத்திட, வரலாற்று அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் செய்யும் திட்ட மிட்ட துரோகம் அன்றி வேறென்ன?

சமரன்

#Nagar| #trahan | #Inka