செவ்வாய், பிப்ரவரி 03, 2026

களப்பிறர் ஆட்சி




பண்டைய தமிழகம்
கிபி மூன்றாம் நூற்றாண்டு
-----------------------------------

பிராமணர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன.

இந்த அதிகார திமிர்த்தனங்களை, ஆதிக்க வெறியாட்டங்களை கண்டு கொதித்து எழுந்த அந்த அடித்தட்டு மக்களின் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக வெடித்தது.

பிராமணியத்தின் அட்டூழியங்களுக்கு இசைவளித்து, அவர்களின் அதிகார அடியாளாக மாறி போய் கிடந்த மூவேந்தர்களின் கொட்டத்தை அடக்கிய, பூர்வீக குடி மக்களின் புரட்சியால் ஏற்பட்ட அரசியல் மாற்றமே களப்பிறர் ஆட்சி.

பிரமதேயம், சதுர்வேதி மங்களம்  உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டிருந்த நிலங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த நிலங்கள் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

அரசர்களிடம் இருந்தும், அப்பாவி மக்களிடம் இருந்தும் பொருட்குவைகளை கபடமாகப் பறிக்கும் பிராமணர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. அவர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகள் ரத்து செய்யப்பட்டன.

ஏற்றத்தாழ்வுகளுக்கு போக்கு காட்டிய பிராமணிய வால் தனங்கள் ஒட்ட நறுக்கப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்துதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் அடக்கப்பட்டன அல்லது மறுக்கப்பட்டன.

களப்பிறர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல; மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்த பெரும் சமூக மாற்றம்.

இது போதாதா..

பின்பு ஒரு காலத்தில்..

பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுத்த வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?

மேன்மை மிக்க தமிழ்  நீச பாசை என்றானது போல, மேலான பறையன் கீழானவன் என்றானது போல, களப்பிறர்களின் பொற்காலத்தை. இருண்ட காலம் என்று தலைகீழ் மாற்றம் செய்தனர்.

வட இந்தியாவிலுள்ள பேரரசுகள்கூட கால்வைக்க முடியாதுபோன தமிழகத்தில் கன்னடர்கள் வந்து மூவேந்தர்களை வென்று இங்கு முன்னூறு ஆண்டுகளுக்குமேல் ஆட்சி செய்தார்கள் என்று கதை கட்டினர். களப்பிறர்கள்  கன்னடர்கள் என்று கதை கட்டினர்.

அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள் எழுதப்பெற்றதும்

இந்த இருண்ட காலத்தில் தான்.

விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பெற்றதும்

இந்த இருண்ட காலத்தில்தான்.

இறையனார் களவியல், பிராமியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் பரிணாமம் பெற்றதும்

இந்த இருண்ட காலத்தில்தான்.

ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள்  மடங்கிக் கிடந்த தமிழ்ப் தமிழ்பாக்கள் தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகளாக செழுமை பெற்றதும்

இந்த இருண்டகாலகட்டத்தில்தான்.

நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த  பூச்சியபாதரின் மாணவரான வச்சிர நந்தி மதுரையில் திராவிட சங்கம் நிறுவியதும்

இந்த இருண்டகாலகட்டத்தில்தான்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பலவும் மணிமேகலையும் சிலப்பதிகாரமும்  மேன்மை பெற்றதும் புத்தமும், சமணமும் ஏற்றம் பெற்றிருந்ததும்

இந்த இருண்ட காலத்தில்தான்.

அதுமட்டுமல்லாது...

சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்தது,

பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான இந்த களப்பிரர்களின் இருண்ட காலத்தில்தான்.

வள்ளுவ பாட்டன் வகுத்தளித்த திருக்குறள் அரங்கேறியதும் இந்த களப்பிரர்களின் இருண்ட காலத்தில்தான்.

அரும்பெரும் மரபின் பெரும் பெயர் பெற்ற களப்பிரர்களின் பொற்கால ஆட்சியில் தான், பிராமண வேளாள அதிகார திமுத்தனங்களால் ஆதிக்க வெறியாட்டங்களால் தூக்கி எறியப்பட்டு இருந்த தமிழ் மீண்டும் அரியணை அரியணை ஏறி ஆட்சி புரிந்தது.

களத்தில் பிறந்த ஆட்சியாதலால் அதற்கு களப்பிறர் என்று பெயர் வந்தது. அந்த களப்பிறர் வேறு யாருமில்லை, களப்பறையர் தான்.

மூவேந்தர்களை அடக்கி ஒடுக்கி முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிறர்களின் அறநெறிகளின் வழிவந்த அறிவூட்டும் தலைமகன்

எங்கள் மக்கள் தலைவர் அண்ணன் எழுச்சித் தமிழர் தலைமையில் களப்பிறர்கள் எனும் மக்கள் புரட்சி மீண்டும் ஒரு நாள் வெடிக்கும்.

அன்று..!

சனாதனத்தை வேரறுப்போம்! புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுப்போம்!

சமரன்

Thol.Thirumavalavan 

#களப்பிறர்
#களப்பிறர்_பொற்காலம்
#இருண்டகாலமல்ல
#மக்கள்புரட்சி
#அடித்தட்டு_வரலாறு
#பண்டையதமிழகம்

ஞாயிறு, நவம்பர் 09, 2025

இளமுறியா

தனுஷ்கோடியில் இருந்து
வேகமெடுத்து உத்திரகோசமங்கை
நோக்கி பறந்து கார். 

உத்திரகோசமங்கை!

புராணமும் புராதனமும் பின்னிப் பிணைந்த உலகின் முதல் சிவ ஆலயம்,  இங்குள்ள மூலவர்  மூவாயிரம் வருடங்களுக்கும் முந்தைய சுயம்பானவர். உலகிலேயே மிகப் பெரிய மரகத நடராஜர் சிலை இங்குள்ளது என்பது போன்ற தகவல்கள் நமக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, ரைட் எடுத்து தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் வேகமெடுத்து அகைன் ரைட் எடுத்தா உத்தரகோசமங்கை பெயர்ப் பலகை நம்மை அன்புடன் வரவேற்கிறது. 

உத்திரகோசமங்கை என்பதற்கு பார்வதிக்கு உபதேசம் தந்த இடமென்று பொருளாம். அதற்கு  முன்பு இதன் பெயர் இலவந்திகை என்கிறது இலக்கியங்கள்.

மாணிக்கவாசகர் வந்தமர்ந்த இலந்தை மரம் இன்றும் தல விருட்சமாக திகழ்கிறது. இந்த மரத்தடியில் தான் மங்களநாதர் எழுந்தருளிய இருக்கின்றார்  

ஐயா..
என் பேரு மாணிக்கம். 
எனக்கு இன்னொரு பேர் இருக்கு.

என்று சூப்பர் ஸ்டார் டயலாக் மாதிரி 

மங்களநாதருக்கும் 
இன்னொரு பேர் இருக்கு. 

கார் குலுங்கி நின்றது. 

அதற்குள் கோயிலுக்கு வந்து சேர்ந்து விட்டோம். பார்க்கிங் கிடைக்காமல் பக்கத்து தெருவில் காரை சொருகி விட்டு எல்லோரும் இறங்க, நான் சட்டென்று நான் காரை விட்டு இறங்கி ராஜகோபுரம் நோக்கி நடந்தேன். 

கும்பாபிஷேகம் முடிந்து, நேற்று கல்யாணமான புது மாப்பிள்ளை போல ஜம்மென்று இருந்தது ராஜகோபுரம். 

ஓம் நமச்சிவாய..
ஓம் நமச்சிவாய..

கோபுர வாசலின் இருபுறமும் அமர்ந்திருந்த யாசகர்கள் சிவ நாமம் உச்சரிக்க உச்சரிக்க, என் நினைவு சட்டென்று பூர்வீக காலத்திற்கு புறப்பட்டு போனது. 

இதோ நான் நிற்கின்ற இந்த இடத்தில் தானே, இதோ என் காலடியில் தானே ஒரு காலத்தில் கடல் இருந்தது. கொடுங்கடல் குடி கொண்டிருந்தது. 

சொன்னால் யாராவது நம்புவீர்களா?

லேசாக புன்னகைத்துக் கொண்டேன்.

நான் கோபுர வாசலிலேயே தேங்கி நிற்பது கண்டு கோயிலுக்கு சென்று கொண்டிருந்த விமல் அண்ணனும்  சம்பந்தம் அண்ணனும் என் வருகை எதிர்பார்த்து அப்படியே நின்றிருந்தார்கள்.

அவர்களை நோக்கி நடந்தேன். 

பஃறுளி ஆற்றோடும்,  பன்மலை அடுக்கத்தோடும் என் சிந்தனை வட்டமடித்துக் கொண்டிருந்தது. 

எல்லோரோடும் கோவிலுக்குள் நுழைந்தேன். ஏதோ விசேஷம் போல, ஏகப்பட்ட கூட்டம். 

நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய உயரமான பிரகாரங்கள் கோயிலின் பிரமிக்க வைக்கும் தோற்றத்திற்கு பங்களிப்பை தருகின்றன.

திருவிளையாடல் படம் பார்த்திருக்கிறீர்களா? 

திருவிளையாடல் படத்தில் சிவாஜி சிவனாக வந்து, சுறாவினைக் கொன்று சாவித்திரியை மணக்கும் காட்சி வருமே, அதுவெறும் கற்பனை காட்சி என்று தானே நினைத்தீர்கள். காட்சி அல்ல.  சங்க இலக்கியங்கள்  பதிவு செய்திருக்கும் காலத்தின் சாட்சி. 

ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.

என்று மாணிக்கவாசகரும் கூட அதனை உறுதி செய்கின்றார்.

அண்ணாமலையில் இருந்து கொண்டு இலவந்திகை பற்றி  பாடுகின்றாரே அந்த படலம் நடந்த இடம் வேறெங்கும் இல்லை. அதோ அந்த வாசலில் தான். 

முன்பொரு காலத்தில் உத்திரகோசமங்கையின் இந்த கோயில் வாசலில் தான் கடல் இருந்தது என்பதை கோவிலின் வெளிப்பிரகாரத்துத் தூண்கள், நந்தி சிலைகள் தான் நமக்கு கடல்வாழ் பாறைகளை நினைவு படுத்துகின்றன; கடற்காற்று அரித்த எச்சங்களைப் பறைசாற்றுகின்றன. 

உத்திரகோசமங்கை கோவிற் குளத்து மீன்கள் கூட கடல் நீரில் வாழும் ரக மீன்கள் தான். 

அம்மன் சன்னதிக்குச் சென்றோம். அவ்வளவாக கூட்டமில்லை. வெளிப்பிரகாரம் சுற்றிக்கொண்டு மரகத நடராசர் சன்னதிக்கு போனோம். 

மரகத சிலை முழுக்க சந்தனத்தால் பூசி, சந்தன காப்பிட்டு இருந்தனர். அங்கிருந்து வெளியில் வந்தால் எதிரே இருக்கிறது தல விருட்சமாக விரிந்து இருக்கிறது இலந்தை மரம். 
 
அழகமர் வண்டோதரிக்குப் பேர்அருள் அளித்த பிரான் என்று இராவணன் மனைவி மண்டோதரி கூட இங்கே வந்து வழிபட்டுச் சென்றதாக மாணிக்கவாசகர் பாடுகிறார்.

மண் முந்தியோ மங்கை முந்தியோ!

என்பது வெறும் வார்த்தை இல்லை. பெரும் நிஜம். கோயிலின் தொன்மை பேசும் சொல்லாடல். ராமேஸ்வரம்  எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

ராமேஸ்வரம் 
என்னங்க.. 
ராமேஸ்வரம்.. 

சொல்லப்போனால் அப்போது இலங்கை என்றொரு தீவே இல்லை.

ஆதி காலத்தில் இந்துமாக் கடல் என்ற ஒரு கடல் தெற்கே இல்லையே இல்லை. எல்லாம் ஒரே நிலப் பரப்பாக இருந்தது. அந்தக் காலத்திலேயே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

நிலமெல்லாம் ஒரே ஒரு கண்டமாக இருந்தது, அது ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை இருந்த அந்த நீண்ட நெடிய கண்டத்திற்கு லெமூரியாக் கண்டம் என்று பெயர். 

லெமூரியா கண்டம் பற்றி; குமரிக்கண்டம் பற்றி, அதன் பெயர் காரணம் பற்றி ஆகச்சிறந்த ஆய்வாளர்கள் எல்லாம் ஏதேதோ டெப்னிசியன்ஸ் சொல்லி இருக்கிறார்கள். 

ச்சும்மா...

உங்க கிட்ட ஒரு கேள்வி. லெமூரியானா என்ன மீனிங்?

கொஞ்சம் கூகுள்ல சர்ச் பண்ணிட்டு வாங்களேன். நானும்  கொஞ்சம் கோவில் சுத்திட்டு வாரேன்.

இன்னும் இன்ச் இன்சாக சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான் காலம் இடம் தரவில்லை. அரை மனதாக, ஒருவழியா வெளியில் வந்தேன். 

எனக்கு முன்னே தம்பிகள் கோயிலை விட்டு வெளிய  வந்திருந்தார்கள். 

என்னடா இது?

கோயில் குளம்னு சுத்திக்கிட்டு, ஒரே போரா இருக்கே என்று உடன் வந்த  தம்பிகளுக்கு கொஞ்சம் சலிப்பு தட்டியிருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. 

அவர்களுக்கு எப்படி சொல்வேன்.. 

புராண உருவாக்கங்களை, அவற்றுள் உள்ளுற உவமையாக இருக்கின்ற ஆதிமானுட நிகழ்வுகளை இப்படியான பயணங்கள் மூலமாக தான் நான் புரிந்துகொள்ள முயல்கிறேன் என்று.!

வெளியில் வந்து ஆளுக்கு ஆள் படங்கள் எடுத்துக் கொண்டோம். 

என்ன.. 
கூகுள்ல சர்ச் பண்ணிங்களா..? 

ஆளு ஆளுக்கு ஏதேதோ சொல்லி நீட்டி முழக்கி வச்சிருக்காங்களா.. 😊 
அதெல்லாம் அப்படியே கொஞ்சம் ஓரம் கட்டிட்டு வாங்க. 

லெமூரியா..!

அதாவது இளமுறியா என்பதே கூட நம்மூர் பெயர் தான். அதுவும் சுத்த தமிழ் பெயர் தான்.

என்ன நம்ப முடியல தானே..? 

ரொம்ப சிம்பிள்..

இலை மூரி என்றால் சோற்றுக்கற்றாழை. பரந்து விரிந்த நீண்ட நெடிய நிலம் முழுக்க சோற்றுக்கற்றாழை விளைந்திருந்ததால் இதற்கு இளமுறியா கண்டம் என்று பெயர்.

அவ்வளவு தாங்க மேட்டர்.

என்ன..

வீட்டு வாசற்படிக்கட்டுகளில் சோற்றுக்கற்றாழை தொங்கிக் கொண்டிருந்தது உங்களுக்கு நினைவில் வந்து போகிறதா? அட அப்படி என்றால் நீங்களும் நானும் நாவலந்தேயவர் தான்.

அப்போ குமரி கண்டம்..? 

அதானே கேட்கிறீங்க..

சோற்றுக்கற்றாழைக்கு இன்னொரு பேர் குமரி. கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும். 

சங்கம் கடந்து, கால வெள்ளம் கடந்து, யுகம் கடந்து நிற்கும் இந்த மண்ணில்   நானும் காலாற நடக்கிறேன் என்பதே  ஒரு வைப் தானே.

சரி இங்கிருந்த எங்கே கடல் போயிற்று..?

கால நிலைகள் தந்த பூமிப் பரப்பின் மாற்றத்தால் அப்படியே பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்க்கம் போய்விட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பாலை நிலவானதற்கு இந்த கொடுங்கடல்தான் காரணம்.

ஐயா..
என் பேரு மாணிக்கம். 
எனக்கு இன்னொரு பேர் இருக்கு.

என்று 
சூப்பர் ஸ்டார் டயலாக் மாதிரி,

மங்களநாதருக்கும் ஏதோ இன்னொரு பேர் இருக்கு அப்படின்னு சொன்னீங்களே.. அது என்ன தலைவா என்று தானே கேட்க வருகிறீர்கள்..? 

 
அது...

பிரளய நாதர்!

ஆழிப் பெருவெள்ள தலைவன்.

கூட்டி கழிச்சு பாருங்க..
கணக்கு சரியா வரும்.

#உத்திரகோசமங்கை #பிரளயநாதர் #மாணிக்கவாசகர் #தமிழ்மண் #குமரிக்கண்டம் #லெமூரியாகண்டம்  #SpiritualJourney #TempleTrails