வியாழன், பிப்ரவரி 10, 2011

அய்யன் காளி




“படை முறை நடை முறையே
விடுதலை வழிமுறை!
நெஞ்சு பதைத்திடும் தலைமுறையே
படைத்திடு புது முறை !”



நெய்யாற்றங்கரை வட்டத்தில் உள்ள கோட்டக்கல் கிராமத்துக்கு உட்பட்ட வெங்ஙானுாரில் அய்யன், மாலை தம்பதியினருக்குப் பிறந்த பத்துப் பிள்ளைகளுள் ஒருவர் காளி. சிலேட்டையும் புத்தகத்தையும் மார்போடு அணைத்தபடி பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளைப் பார்த்து ஏக்கத்துடன் தானும் அதுபோல செல்ல வேண்டும் என்கிற ஆசையைத் தன் பெற்றோரிடம் தெரிவித்த போதுதான் தனது சாதிக் காரர்களைப் பள்ளியில் அனுமதிக்க மாட்டார்கள் என்கிற உண்மை சிறிய வயதுக் காளிக்குப் புரிந்தது.

இச்சம்பவம் சிறுவனின் நெஞ்சுக்குக் கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த முதல் அதிர்ச்சேயைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட அதிர்ச்சிகள். ஓணம் பண்டிகைச் சமயத்தில் மேல்சாதிக் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடியதால் நேர்ந்த அவமானம், எதிரில் வந்த மேல்சாதிக்காரன் காரணமில்லாமல் ஓடு ஓடு என்று நாயை விரட்டுவது போல விரட்டியடித்ததால் உருவான மனக்காயம், பெரிய சாதிக்காரர்களின் வீட்டு வாசலைத் தெரியாமல் மிதிக்க நேர்ந்ததால் கிடைத்த வசைகள், தனது சாதிக்குரிய கட்டுப்பாட்டோடு நடக்கத் தெரியாதவன் என்று தந்தையே மனம் வெறுத்துப் பேசிய பேச்சு எனப் பல முனைகளிலிருந்து நேர்ந்த கசப்பான அனுபவங்களால் துவண்ட சிறுவன் காளியின் மனத்தில் தன் ச்முகம் கல்வியும் விழிப்பும் பெற்ற ச்முகமாக மாறுவதே எல்லாத் தாழ்வுகளிலிருந்தும் மீட்சியைக் கொடுக்கும் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்தது.

1888ல் சிவராத்திரி நாளன்று நாராயணகுரு அவர்கள் அருவப்புறம் என்னும் இடத்தில் நடத்திய சிவன் பிரதிஷ்டை சமுதாய மறுமலர்ச்சி வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். இதனால் உத்வேகமுற்ற அய்யன் காளி புலையர்களை ஒருங்கிணைத்துத் தலைமைப் பொறுப்பேற்று சாது ஜனபரிபாலன சங்கம் என்ற அமைப்பை நிறுவினார்.

அய்யன்காளியின் போராட்ட முறை விசித்திரமானது. சாகசம் மிகுந்தது. அறிவாற்றலையும் உடலாற்றலையும் இணைத்து எதிர்க்கும் வல்லமை கொண்டது. பொது வழியினுாடே நடந்து போகும் உரிமையை மீட்டெடுக்க நடத்திய போராட்டம், தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளியில் அனுமதி மறுப்பதை எதிர்த்து நடத்திய போராட்டம் என அய்யன்காளியின் எல்லாப் போராட்டங்களுமே தீவிரமான தொடர்ந்த முயற்சிகளுக்குப் பிறகே வெற்றி கண்டவை.

தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கும் தலைமை ஆசிரியரை எதிர்த்து ஒரு போராட்டம். யாரையாவது சேர்த்தால் பள்ளியைக் கொளுத்தி விடுவோம் என்று அச்சுறுத்தும் மேல்சாதிக்காரர்களை எதிர்த்தும் போராட்டம். சேர்க்கப்பட்ட பிறகு பிள்ளைகளுக்குச் சொல்லித் தர மறுக்கிற ஆசிரியர்களை எதிர்த்தும் போராட்டம். சொல்லித்தர ஆசிரியர் யாராவது கிடைக்க மாட்டார்களா என்று நாடெங்கும் அலைந்து திரிவதில் ஒரு போராட்டம். எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் இப்படி எதிர்ப்பைச் சமாளித்தபடி முன்செல்ல வேண்டியிருந்தது. எக்கணத்திலும் மனம்தளராது, சுற்றி இருப்பவர்களின் மனமும் தளர்வடைய விடாது தொடர்ந்து உறுதியாகப் போராடி வெற்றியை அடைந்தார் அய்யன்காளி.

பள்ளியை எரிக்க வருகிறவர்களை எதிர்க்க சிலம்பப் பயிற்சி மிகுந்த படையொன்றைக் காவலுக்கு நிறுத்தி வைத்தார். வெகுதொலைவிலிருந்து வரும் நாயர் வகுப்பைச் சேர்ந்த ஆசிரியருக்கு ஒரு படகுப்பயணம், ஒரு சைக்கிள் பயணம் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து தினந்தோறும் அழைத்து வரும்படி நேர்கிறது. ஒவ்வொரு செயலிலும் பல முட்டுக்கட்டைகள். அனைத்தையும் சாமர்த்தியமாக வெல்கிறார் அய்யன்காளி.

அந்தக் காலத்தில் இந்தியச் சிற்றரசுகளிலேயே திருவிதாங்கூரில் மட்டுமே இருந்த சட்டசபைக்கு ஸ்ரீமுலம் மக்கள் சபை என்பது பெயராகும். புலையர்களின் மேம்பாட்டுக்காக இந்தச் சபையில் உறுப்பினர்களாக இருந்த பி.கே.கோவிந்தன், அய்யன் காளி ஆகியோர் ஆற்றிய உரைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

புலயர்கள் கலகம் என்னும் பகுதியில் வரலாற்றின் திருப்புமுனையாக சில சம்பவங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அய்யன்காளி வெளிப்படுத்தும் உறுதியும் போராட்டக்குணமும் தலைமைப்பண்பும் எல்லாத் தலைமுறையினரும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். கோயில் நுழைவு ஆணை தொடர்பாக காந்தி-அய்யன்காளி சந்திப்பும் திருவிதாங்கூரில் காந்தி நிகழ்த்திய உரைக்குறிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகாராஜாவுக்கு காந்தி எழுதிய சிறு கடிதக் குறிப்பையும் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட விவேகாநாந்தரின் குறிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும் மனம் ஒரு வேறுபாட்டை உடனடியாக உணர முடியும். இன்றைய சமுதாய மாறுபாட்டுக்கும் அணுகுமுறைக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் தொடர்ந்த போராட்டங்களும் வெற்றிகளுமே காரணம் என்பது மிகையான கூற்றாகாது. அய்யன்காளியின் அயராத உழைப்பு இதன் பின்னணியில் இருந்ததை எப்போதும் மறக்கக் கூடாத ஓர் உண்மை.

ஓயாத அலைச்சல்களால் உடல்நலம் குன்றிய அய்யன்காளி 18.6.1941 அன்று இந்த உலகைவிட்டுப் பிரிந்தார். அவரது கல்லறையின் மீது மங்காத ஓவியக்கூடம் நிறுவப்பட்டது.












கருத்துகள் இல்லை: